×

மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15 ஆட்டோக்கள், 5 வீடுகளின் ஜன்னல் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமிகள் அட்டூழியம்; 3 பேரிடம் போலீசார் விசாரணை

திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நள்ளிரவு ஆயுதங்களுடன் வந்த போதை கும்பல் 15 ஆட்டோக்கள், 5 வீடுகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் கடந்த சில தினங்களாக கஞ்சா போதைக்கு அடிமையான வாலிபர்கள் இரவு நேரங்களில் சுற்றி வருவதாகவும், அங்குள்ள பூங்கா மற்றும் சிஎம்டிஏ.க்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காலி கட்டிடங்களில் தங்கி இருந்து கஞ்சா அடிப்பது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மர்ம கும்பல் கையில் அரிவாளுடன் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் கண்ணாடிகளையும், 5 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். நள்ளிரவில் சத்தம் கேட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெளியே வந்து கூச்சலிட்டபோது அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து, பொதுமக்கள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். மாதவரம் பால்பண்ணை போலீசார் எம்.எம்.டி.ஏ பகுதிக்கு விரைந்து வந்து அங்கு மர்ம கும்பலை தேடினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பிறகு வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 5 வாலிபர்கள் கையில் அரிவாளுடன் தெருவில் வலம் வந்ததுடன் ஆட்டோ மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து, உடைத்து துவம்சம் செய்தது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் மகிமைநாதன், இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் மர்ம கும்பல் குறித்து விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பெரிய மாத்தூரை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் பழிவாங்க அரிவாளுடன் எதிரிகளை தேடி எம்.எம்.டி.ஏ பகுதிக்கு வந்ததாகவும், அந்த நபர்கள் சிக்காததால் ஆத்திரமடைந்த கும்பல் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அரிவாளால் அடித்து சேதப்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15 ஆட்டோக்கள், 5 வீடுகளின் ஜன்னல் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமிகள் அட்டூழியம்; 3 பேரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mathur MMDA ,Tiruvottiyur ,Madhavaram… ,Dinakaran ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் 15...